கனமழையால் மேம்பாலத்தின் கீழ் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கிய கார்… உயிருக்காக போராடிய ஏழு பேர் : கோவையில் நடந்த திக் திக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 11:14 am
Cbe Rain - Updatenews360
Quick Share

கோவை : கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டதில் 7 பேர் உயிருக்கு போராடிய காட்சி மனதை உருக வைத்துள்ளது.

கோவையில் நேற்று மாலை பெய்த ஒரு மணி நேர கன மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையில் உள்ள பாலங்களுக்கு அடியிலும் பெருமளவில் மழைநீர் தேங்கியது.

இந்த நிலையில் கோவை ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வடகோவை பகுதிக்கு செல்வதற்காக தங்களுடைய காரில் ராம்நகர் கிக்கானி பள்ளி வழியாக சென்றபோது, ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியிருந்த மழை நீரை பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முயன்றபோது பாலத்தின் அடியில் தேங்கி இருந்த மழை நீரில் கார் சிக்கிக் கொண்டது.

இதனால் காரில் இருந்த ஏழு பேரும் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு ஏழு பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இதே போல கனமழை காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கோவை மாநகரப் பகுதியில் அடிக்கடி பெய்து வரும் கனமழையால் பாலம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதற்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தகவல் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 574

0

0