தகாத உறவில் மூழ்கிய கணவன்… தட்டிக் கேட்ட மனைவி : அரசு மருத்துவமனையில் அரங்கேறிய நாடகம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2023, 9:17 pm
Wife Murder - Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோப்புக்கனா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சேட்டு. எலக்‌ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பானுமதி என்பவருடன் திருமணமாகி மிதுன்ராஜ் (வயது 9), கார்த்திகேயன் (வயது 4) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

பானுமதிக்கு வயிற்றில் நீர்க்கட்டி பிரச்சனை உள்ளதால் சிகிச்சை பெற்று வருகிறார். இருவருக்குமிடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சேட்டுவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பானுமதி இது குறித்து தனது கணவரிடம் கேட்டு சண்டையிட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றியதில் திடீரென கோபத்தில் சேட்டு தனது மனைவி பானுமதியை கன்னத்தில் அறைந்து கழுத்தை நெறித்துள்ளார். இதில் நிலைகுலைந்து கட்டிலில் விழுந்த பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பதட்டமடைந்த சேட்டு உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். தனக்கு எதுவும் தெரியாதது போல் வழக்கமாக பிள்ளைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

மூத்த மகன் மிதுன்ராஜ் உள்ளே சென்று பார்த்தபோது, தனது தாய் கட்டிலில் கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளார். பின்னர் சேட்டு உள்ளே சென்று பானுமதியை சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்ததோடு, கண்ணீர் மல்க கதறி அழுதுள்ளார்.

பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், அவரது உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருந்ததை கண்டறிந்து ஆற்காடு நகர போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். உயிரிழந்த பானுமதியின் கணவர் சேட்டுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தனது நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கேள்வி எழுப்பியதால் கோபத்தில் கன்னத்தில் அறைந்து கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சேட்டு மீது வழக்கு பதிவு செய்த ஆற்காடு நகர போலீசார் ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.

Views: - 404

0

0