கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீசார் : முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2022, 10:26 am
Cbe Police - Updatenews360
Quick Share

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3 ஆயிரம் போலீசாரும், புறநகரில் 1,000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால் மற்றும் கடைவீதி பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.

இதேபோன்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இது தவிர கோவை ரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாநகரில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் தகுந்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Views: - 290

0

0