அதிமுகவின் 2ம் பாகம் ‘எங்கள் வீட்டு பிள்ளை’ படம் போல இருக்கும் : ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேச்சு…!!

Author: Babu Lakshmanan
8 July 2022, 4:48 pm
Quick Share

சென்னை : இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார் என்றும், எங்கள் வீட்டு பிள்ளை படம் போல அதிமுகவின் இரண்டாம் பாகம் இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அவரை சந்தித்த பிறகு ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- 2017ல் காமராஜ் உணவுத்துறை அமைச்சராக இருந்த போதே, அவர் மீது ஊழல் புகார் கொடுத்தேன். திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் டிவிஎஸ்சிக்கு கடிதம் எழுதினேன். அதன் காரணமாக தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

காமராஜ் என்ற பெயரை அவர் மாற்றிக் கொன்டால் நன்றாக இருக்கும். இந்த சோதனையிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. சோதனைக்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்.

காமராஜ் ரேசன் துவரம் பருப்புக்கு கிலோவுக்கு 15 முதல் 30 ரூபாய் வரை முறைகேடாக கொள்ளையடித்துள்ளார். அவருக்கு 60 கோடி வரை சொத்து மதிப்பு ஏறியுள்ளதாக ஊடகங்களில் செய்தி பார்த்தேன். ஆனால் 3,4 ஜீரோ சேர்க்க வேண்டும். அவரை விரைந்து சிறைக்கு அனுப்ப வேண்டும். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விரைவில் புகாரளிப்பேன்.

பொதுக்குழு தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். எடப்பாடி தரப்பினர் பொதுக்குழுவை வேலைகளை நிறுத்தி விட்டு ஆங்காங்கே நடக்கும் ரெய்டை போய் பார்க்கவும். 4 ஆண்டுகால ஊழல் ஆட்சியை எடப்பாடி நடத்தியதால்தான் முன்னாள் அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

அமைதியின் அடையாளம் ஓபிஎஸ் , அக்கிரமக்காரர் இபிஎஸ். கூட்டுக் களவானிகள் ஓபிஎஸ்-சை தனிமைப்படுத்தி வைத்திருந்ததால் அவரால் ஊழல் செயல்பாடுகளை கண்டிக்க முடியவில்லை. இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்க மாட்டார் , பொதுக்குழுவில் பாட்டில் வீசி அவமதித்த பிறகும் அவர்களை எதிர்கொண்டு பேசிவிட்டு வெளியேறினார்.

எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப்போல், அதிமுகவின் இரண்டாம் பாகத்தை இனிதான் பார்க்க போகிறீர்கள், இனி பலருக்கு அடி விழுகும், என்று கூறினார்.

Views: - 579

0

0