‘கழகத்தின் காவலர் எடப்பாடியார் வாழ்க’… நீதிமன்ற தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்..!!

Author: Babu Lakshmanan
2 September 2022, 2:26 pm
Quick Share

கரூர் ; அதிமுக பொதுக் குழு செல்லும் என அறிவித்ததையடுத்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் எனவும், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது எனவும், உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த நீதிமன்ற தீர்ப்பால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்ற வகையிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றை தலைமையிலான அதிமுக பலம் பெறவும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கழக தலைவர் திருவிகா தலைமையில் அதிமுகவினர் கரூர் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதற்கு முன்னதாக அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை ஊர்வலம் சென்று, ‘கழகத்தின் காவலர் எடப்பாடியார் வாழ்க’ என கோஷங்கள் எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகரக் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 505

0

0