கார்ப்பரேட்டில் இருந்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா ஆட்சி இந்த லட்சணத்துலதா இருக்கும் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2022, 3:59 pm
Sellur Raju - Updatenews360
Quick Share

மதுரை : கார்பரேட்டில் வேலை செய்தவர் அமைச்சராக உள்ளார். அவருக்கு ஏழை, எளிய மக்கள் நிலை தெரியுமா ? அதனால் தான் விலை வாசி உயர்ந்துள்ளது என நிதியமைச்சரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டினார்.

கடும் விலைவாசி உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக இன்று பெத்தானியாபுரம் பகுதியில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜு அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் ராஜா பொருளாளர் அண்ணாதுரை உட்பட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட நிலையில் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன

பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு தற்போது ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் வகையில் சொத்து வரி உயர்வை உயர்த்தி உள்ள திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செல்லூர் கே.ராஜூ அவர்கள் தொடர்ந்து மேடையில் பேசும்போது வடிவேலு காமடியை போல தி.மு.க ஆட்சி நடக்கிறது. வடிவேலு காலையில் பயபக்தியுடன் கிளம்பும்போதும் இரவில் மதுபானம் அருந்திவிட்டு வருவதும் போல வாக்கு சேகரிக்கும் போது பயபக்தியுடன் வந்த திமுக தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்துகொண்டு மக்கள் நலனில் அக்கறை காட்டாது உள்ளது என்றார்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி ஒன்று ஆனால் நடப்பது ஒன்றாக உள்ளது. திமுக ஆட்சியில் விலை வாசி எல்லாவற்றிலும் உயர்கிறது. கார்பரேட்டில் வேலை செய்த மதுரையைச் சேர்ந்தவர் அமைச்சராக உள்ளார். அவருக்கு ஏழை, எளிய மக்கள் நிலை தெரியுமா ? அதனால் தான் விலை வாசி உயர்ந்துள்ளது.

ஆனால் அம்மா ஆட்சியிலும், எடப்பாடியார் ஆட்சியிலும் அப்படி நடக்கவில்லை. பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவந்தவர்கள். யாரும் பசியோட இருக்க வேண்டாம் என பல திட்டங்களை கொண்டுவந்தனர்.

புரட்சித் தலைவர் எப்படி சத்துணவு கொண்டுவந்தாரோ, அதைப் போல் அம்மா அவர்கள் அம்மா உணவகம் கொண்டுவந்து நற்பெயரை பெற்றார். அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு பணம், பொருள் என மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் வழங்கினோம்.

அம்மா கொடுத்த சாதனை திட்டத்தால் தான் பல முறையில் ஆட்சிக்கட்டில் அமர்ந்தார். அதைப்போல் எடப்பாடியார் 7.5% சதவீதம் மாணவர்களுக்கு சலுகை கொடுத்து நல்ல திட்டத்தை கொடுத்தார்.

நகை கடன் தள்ளுபடி செய்வோம் அதை செய்வோம் என சொல்லிவிட்டு மக்களை ஏய்த்துவிட்டனர். வரி உயர்வை தி.மு.க அரசு அதிகப்படுத்தியுள்ளது. தி.மு.கவினர் குடும்பத்தோடு சுற்றுலா சென்றீர்கள். நீட் தேர்வு விலக்கு, 7 பேர் விடுதலை என்ன ஆட்சு ?

இலவச பேருந்து என கூறிவிட்டு சில பேருந்துகளை மட்டும் தான் அளிக்கின்றனர். தி.மு.க எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பட்டினி பசிதான் ஏற்படும். தெர்மாகோல் திட்டம் பொறியியல் செயல்படுத்தியது தவறு, அதை கிண்டல் செய்தார்கள்.

ஆனால் மின்சாரத்தில் அணில் சென்றதையோ, அமைச்சர் பிப்ரவரி என்று சொன்னதெல்லாம் கிண்டல் ஆகவில்லை. மதுரைக் காரர்கள் சொன்னால் அதற்கு மட்டும் கிண்டலா ?

தி.மு.க ஆட்சியில் பாலியல் தொல்லை, கட்ட பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது. போலீஸுக்கே தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவோம்.

மதுரை மாநகராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வைரமாக ஜொலிப்பார்கள் என்றார்.

Views: - 873

0

0