சினிமா பட பாணியில் பிரபல தொழிலதிபரை கடத்த முயற்சி : துப்பாக்கியை காட்டி மிரட்டிய முகமூடி கொள்ளையன்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2023, 6:26 pm
Kidnap - Updatenews360
Quick Share

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சத்யன். இவர் உடையார்பாளையத்தில் மரப்பட்டறை தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் தனது மனைவி இரு குழந்தைகளுடன் மதுரைக்கு கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு திருச்சி சஞ்சீவி நகரில் உள்ள ஹோட்டலில் தனது குடும்பத்துடன் உணவருந்தினார்.

உணவருந்திய பிறகு தனது காரில் ஏறியபோது, முகமூடி அணிந்த ஒரு நபர் காரில் ஏறி சத்யனின் குழந்தை கழுத்தில் கைத்துப்பாக்கி போன்று ஒன்றை வைத்து கொண்டு சத்யனிடம் உடனடியாக காரை எடு இல்லையென்றால் சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனைக் கண்டு பயந்து போன சத்தியன் மனைவி குரல் எழுப்பவே அங்கிருந்த பொதுமக்கள் கார் அருகே விரைந்து வந்தனர்.
இதை கண்ட அந்த முகமூடி நபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சத்தியன் அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகமூடி நபர் அந்த பகுதிக்கு ஆட்டோவில் வந்து இறங்கியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆட்டோ அரியமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது ஆட்டோ என்பது தெரிய வந்துள்ளது.

அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் ஸ்டாலினிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சினிமா பாணியில் தொழிலதிபரை குடும்பத்துடன் கடத்த முயன்ற நபரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 255

0

0