இந்து அறநிலையத்துறை வளர்ச்சியடைய அண்ணாமலையே காரணம் : ட்விஸ்ட் வைத்த அமைச்சர் சேகர்பாபு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2022, 2:15 pm
Minister Sekar Babu - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : இந்து சமய அறநிலையத் துறையின் பொற்காலம் தமிழக முதல்வரின் ஆண்ட காலம் என்று சொல்லுகின்ற அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மேலூர் வடிவுடை அம்மன், பழவேற்காடு ஆதிநாராயண
பெருமாள் சமயேஸ்வரர் சிவன் கோவில், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், கோவிந்தராஜன் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் நேரில் பார்வையிட்டு கோவில்களின் பழமைகள் பராமரிப்பு வழிபாடு முறைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணி துவங்கி 14 ஆண்டுகள் ஆகிறது.

உடனடியாக கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், மேலூர் திருவுடையம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 8 கோடி ரூபாய் செலவில் தங்கத்தேர் செய்யப்படும் என்றும் அடிப்படை பணிகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

சிறுவாபுரி கோவில் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு
விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர், சிதம்பரம் கோவிலில் ஐந்து பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. கள ஆய்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்க்கப்பட்டுள்ளதாகவும் கோவில் சொத்து வழிபாட்டு கட்டணங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும்
கனகசபை தரிசனம் குறித்து நீதிமன்றம் முடிவின்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்கள் புனரமைப்புக்கு 100 கோடி அரசு வழங்கியுள்ளதாகவும், இந்து சமய வரலாற்றில் இது முதல் முறையாகும். இந்தாண்டு 1500 திருக்கோவில்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மேலும் கிராமப்புற திருக்கோயில்கள் 1500 கோவில்களும் 1250 ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதியில் உள்ள கோயில்கள் தலா
2 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு தலையீடு இருந்தால் தான் அனைத்து பணிகள் சிறக்கும். அண்ணாமலை போன்றவர்கள் விமர்சனங்கள் தங்கள் பணியை மேலும் மேம்படுத்தும்
என்றும் இந்து சமய அறநிலையத் துறையின் பொற்காலம் தமிழக முதல்வரின் ஆண்ட காலம் என்று சொல்லுகின்ற அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாகும் கூறினார்.

சட்டவிதிமுறைகள் மீறி தவறாக திருக்கோயில்களை பயன்படுத்தினால்தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடும். சிறந்த முறையில் வழி வழியாக கோவில்களை நிர்வகிக்கும் தர்மகர்த்தாக்கள் அறங்காவலர்கள் விவகாரங்களில் இந்து சமய அறநிலைத்துறை தலையிடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Views: - 753

0

0