38ஐ காதலித்து திருமணத்திற்கு மறுத்த 26: போலீசில் வசமாக சிக்கிய வங்கி ஊழியர்..!!
Author: Aarthi Sivakumar25 October 2021, 2:06 pm
கோவை: திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு வயதை காரணம் காட்டி திருமணத்துக்கு மறுத்த வங்கி ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையை அடுத்த வெள்ளலூரை சேர்ந்த 38 வயது பெண் எம்.சி.ஏ. படித்து விட்டு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே அந்த பெண்ணிற்கு, சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான முனீஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர், அந்த பெண்ணிற்கு வங்கி கணக்கு தொடர்பான சில உதவிகள் செய்து கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களுடைய பழக்கம் காதலாக மாறியது. அந்த பெண்ணிற்கு 38 வயது என்பது தெரிந்தும் முனீஸ்வரன் காதலித்தாக கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண் தனக்கு 38 வயது, உனக்கு 26 வயது தான் ஆகிறது. எனவே என்னை உனது குடும்பத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியும் முனீஸ்வரன் அந்த பெண் மீது கொண்ட அளவுக்கு அதிகமான ஆசையால், அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண் முனீஸ்வரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஆசையால் நினைத்த அந்த காரியம் நிகழ்ந்த பின்னர் தான் முனீஸ்வரனுக்கு அந்த பெண்ணின் வயது கண்ணில் தெரிந்தது. இதையடுத்து முனீஸ்வரன் அந்த பெண்ணை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் முனீஸ்வரனை நேரில் சந்தித்து திருமணம் குறித்து பேசினார். அப்போது அவர், உனக்கு 38 வயதாகி விட்டது. எனவே உன்னை நான் திருமணம் செய்து கொள்ள எனது குடும்பத்தினர் சம்மதிக்க மறுக்கிறார்கள் என்று கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல் உள்பட 4 பிரிவுகளில் கீழ் முனீஸ்வரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலால் வயதை மறந்து உல்லாசம் அனுபவித்து பின்னர் வயதை காரணம் காட்டி பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வங்கி ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0
0