ஜோக்கர் முகமூடி அணிந்து வந்த திருடனை ஜோக்கர் ஆக்கிய ஏடிஎம் : மீண்டும் வருவேன் என எச்சரித்து செய்கை!!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2021, 4:12 pm
கன்னியாகுமரி : குறும்பனை மீனவ கிராமத்தில் வங்கியுடன் செயல்பட்டு வரும் ஏடிஎம் இயந்திரத்தை முகமூடி அணிந்து வந்த திருடன் ஒருவர் உடைத்து பணம் திருடும் முயற்சியில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பக்கம் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரமும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் ஜோக்கர் முகமூடி அணிந்தபடி வந்து ஏடிஎம் இயந்திரத்தின் முன் இருந்த சிசிடிவி கேமராவின் இணைப்பை துண்டித்துவிட்டு உள்ளே சென்று கையில் மறைத்து வைத்திருந்த கடப்பாரை மூலம் உடைத்து பணம் திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஏடிஎம் உள்ளே இருக்கும் கேமராவை பார்த்து கையை காட்டி செல்லும் வீடியோ பதிவாகி இருந்தது. இன்று காலை வங்கி ஊழியர்கள் அலுவலகம் வந்தபோது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து சிசிடிவி காட்சிகளை கைபற்றி அதன்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0