இலங்கைக்கு பல கோடி மதிப்பிலான சுறா மீன் துடுப்பு கடத்த முயற்சி : 2 பேர் கைது… ஒருவருக்கு வலைவீச்சு!!

Author: Babu Lakshmanan
24 August 2022, 3:12 pm
Quick Share

இலங்கைக்கு கடத்த இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுறாமீன் துடுப்பு, மற்றும் கடல் அட்டைகள், பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த சல்லிதோப்பு கடற்கரை பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இலங்கைக்கு கடத்துவதற்கு தயார் நிலையில், படகில் ஏற்றப்பட்டு இருந்த எட்டு மூட்டைகளில் சுறா மீன் துடுப்புகள் எனப்படும் சுறாபீலிகளுடன் படகு புறப்பட தயாராக இருந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில், விஜய் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சுமார் 22 மூடை கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக மூன்று ட்ரம்களில் பெட்ரோல், டீசல் போன்றவையும் இருந்ததையடுத்து அவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அந்த தோட்டத்தில் இருந்த காவலாளிகள் செல்வம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தென்னந்தோப்பு உரிமையாளர் விஜய் ஆனந்தை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை க்யூ போலீசார் கீழக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 462

0

0