பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுவிற்பனை ஜரூர்… பள்ளப்பட்டி சந்தையில் ஜமுனாபுரி ஆடுகளுக்கு டிமேண்ட்!!

Author: Babu Lakshmanan
9 July 2022, 10:41 am
Quick Share

பள்ளப்பட்டி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். ஏனென்றால் பள்ளப்பட்டியில் முஸ்லிம் மக்கள் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும், வெளி மாநிலங்களிலும் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பக்ரீத் பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு வருவது வழக்கம்.

இந்த பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பள்ளப்பட்டியில் ஆட்டுச்சந்தை 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்தாண்டும் ஆட்டுச்சந்தை நேற்று தொடங்கியது. கரூர், அரவக்குறிச்சி, திருப்பூர், காங்கேயம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலையே வியாபாரிகள் சரக்கு ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இவற்றை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், இறைச்சிக்கடைக்காரர்களும், வியாபாரிகளும் சந்தையில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதனால் விற்பனை அமோகமாக நடந்தது. இந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு 12,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை போகும். ஆனால் பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரிக்க பத்து கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூபாய் 15,000 முதல் 16,000 வரை விற்பனைக்கு போனது.

ஜமுனாபுரி என்ற 65 கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை 35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு நாள் சந்தையின் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Views: - 547

0

0