அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…ஆக்சிஜன் பிளாண்டில் 7 கிலோ காப்பர் வயர் திருட்டு: 8 பேட்டரிகள் மாயம்..காஞ்சியில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
16 May 2022, 4:58 pm
Quick Share

காஞ்சிபுரம்: அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்டில் இருந்து மெயின் இணைப்புக்கு போகும் விலை உயர்ந்த 7 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு. அதேபோல் காசநோய் பிரிவில் இருந்து சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 பேட்டரிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் வந்து செல்கின்றனர். 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த தலைமை மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய விதத்தில் வென்டிலேட்டர் உள்ளிட்ட பல உபகரணங்கள் சுகாதாரத் துறையாலும் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.

அந்த உபகரணங்களில் கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் உபகரணங்களான வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவி எண்ணிக்கை 6 , எக்ஸ்ரே பேட்டரி எண்ணிக்கை 20, குளிர்சாதனப் பெட்டி எண்ணிக்கை 4 (ஏசி), இன்வெண்டர் என சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் கடந்த பத்து மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தின் அறுவை சிகிச்சை அரங்கம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்ட்டிலிருந்து, 90 மில்லிமீட்டர் கனமுள்ள சுமார் 7 கிலோ எடை கொண்ட விலையுயர்ந்த காப்பர் வயர்கள் திருடப்பட்டது. இதனால் ஆக்சிஜன் பிளான்ட் தற்சமயம் இயக்குவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

அதேபோல் காச நோய் பிரிவு வளாகத்தில் இன்வெர்டருடன் (INVENTER) வைக்கப்பட்டிருந்த தலா பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 விலை உயர்ந்த பேட்டரிகள் திருடப்பட்டது கண்டு மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மக்களே வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் (பாதுகாவலர்கள்) பணி புரிகின்றார்கள். பலமான செக்யூரிட்டிகள் இருந்தும் அவ்வப்போது இந்த மருத்துவமனையிலிருந்து உயிர்காக்கும் உபகரணங்கள் திருடப்படுவது தொடர்கதையாக உள்ளது.

இதுபோல் ஏற்கனவே பலமுறை இந்த அரசு மருத்துவமனையில் இருந்து பலவிதமான முக்கிய உபகரணங்கள், உயிர் காக்கும் மருந்துகள், மாத்திரைகள் ஆகியவற்றை களவாடிச் சென்று தனியார் மருத்துவமனைகளுக்கும் மருந்தகத்திற்க்கும் விற்பனை செய்தது தொடர்பாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஜீவா இளங்கோ மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் (பொறுப்பு) கல்பனா ஆகியோர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தான் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து விலை உயர்ந்த உபகரணங்கள் அவ்வப்போது திருடப்படுகிறது என பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் இது எங்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது என்றும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மிக புனிதமான இடமாக கருதப்படும் அரசு மருத்துவமனையிலிருந்து முக்கிய உபகரணங்களை களவாடிச் சென்ற அயோக்கியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் வைக்கின்றனர்.

மருத்துவமனைக்கு நிரந்தரமான கண்காணிப்பாளர் நியமித்தால் தான் இதுபோன்ற அவலங்கள் ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த பத்து மாதம் முன்பு சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயிர்காக்கும் சுவாச கருவிகள் உள்ளிட்டவை திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சி அமைந்த முதலே மருத்துவமனையில் பலவிதமான குளறுபடிகள் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டியுள்ளனர்.

Views: - 597

0

0