பட்டாக்கத்தியால் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் : வைரலான வீடியோ.. பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்கினர்!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 3:27 pm
4 Arrest - Updatenews360
Quick Share

கோவை : இடையர் வீதி சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெரைட்டி ஹால்ரோடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவரது செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது.

அந்த வீடியோவில், நள்ளிரவில் 6 இளைஞர்கள் ஒன்று கூடி நடுரோட்டில் நின்று கொண்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்துள்ளன.

சம்பவம் நடந்த இடம் எது என்று தெரிந்து கொள்ள வீடியோவை மீண்டும் பார்த்த காவலர், இச்சம்பவம் இடையர் வீதியில் நடைபெற்றுள்ளது என்பதை உறுதி செய்தார்.

இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் தகவல் அளித்த அவர், ரோந்து வாகனத்தில் மேலும் சில காவலர்களுடன் இடையர் வீதி பகுதிக்கு சென்றார்.

அப்போது விசாரித்ததில், அந்த வீடியோவானது கடந்த மாதம் 25 ஆம் தேதி எடுக்கப்பட்டது என தெரியவந்தது. இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில், செல்வபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக (Sales Rep) பணியாற்றி வரும் அசோக்குமார் (வயது 30) என்பவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து செல்வபுரத்தை சேர்ந்த அசோக்குமாரை கைது செய்த போலீசார், அவரது நண்பர்களான செல்வபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அரவிந்தகுமார் (வயது 27), வடவள்ளி பி.என்.புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி தினேஷ்குமார் (வயது 23) மற்றும் காந்திபார்க் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோரை கைது செய்தனர்.

இதில், அசோக்குமார், தினேஷ்குமார், பார்த்திபன் ஆகியோர் மீது அடி தடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும்,வழக்கில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பேரில் பட்டாக் கத்தி போன்ற ஆயுதங்களுடன் கேக் வெட்டி கொண்டாடுவது குறித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 430

0

0