பிரதமர் மோடி படத்துடன் ஆணி மற்றும் சுத்தியலுடன் வந்த பாஜகவினர் : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2022, 4:13 pm
Modi Frame with Nail -Updatenews360
Quick Share

மதுரை : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை மாட்ட ஆணி மற்றும் சுத்தியுடன் வந்த பாஜக மாவட்ட தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு மூலமாக நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை மாட்ட வேண்டும் எனக் கோரி பாஜக மாவட்ட தலைவர் சரவணன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் அனீஸ் சேகரிடம் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை கொடுத்து மாட்டி வைக்குமாறு கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் சரவணன் கூறுகையில் தமிழகத்தில் மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. அதற்கு மத்திய அரசிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் அனுப்பப்படுகிறது.

மாநில அரசு அலுவலகங்களில் தமிழக முதல்வரின் புகைப்படம் வைத்திருப்பது போல பிரதமர் புகைப்படமும் மாட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம், என்றார்.

இன்று மாவட்ட ஆட்சியரின் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் பிரதமர் புகைப்படம், ஆணி மற்றும் சுத்தியுடன் மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் வழங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 616

0

0