முஸ்லீம் பயங்கரவாதிகள் என இஸ்லாமியர்களுக்கு அவப்பெயர்… முழுக்க முழுக்க காரணமே திமுக கூட்டணி தான் : வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
9 March 2023, 9:06 am
Quick Share

திருவள்ளூர் :தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இஸ்லாமிய சமூகம், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள் என அவப்பெயரோடு சுற்றி வருவதற்கு காரணம் திமுக, காங்கிரஸ் மற்றும் திருமாவளவன் போன்றவர்கள் தான் என பாஜகவின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பொன்னேரியில் மகளிர் அணி மாவட்ட தலைவர் டாக்டர் சுமதி ஜெயபால் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், சமூக சேவை, நடனம், விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு பாராட்டு பதக்கங்களை வழங்கி மகளிருக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளி வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசிய சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், ஆண்களை போன்று போராடக்கூடிய ஆற்றல் பெண்களுக்கு இருக்கிறது என்றும், பெண் சக்திகளாக உருவாக்கி காட்டியவர் பாரதப் பிரதமர் மோடி என்றும் கூறினார். முன்னாள் பிரதமரின் மகன் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் மகன் ராகுல் காந்தியையே பாராளுமன்ற தேர்தலில் ஸ்மிருதிராணி என்ற சிங்க பெண் தோற்கடித்தார் என்று கூறிய அவர், உலகநாயகன் திரைப்பட நடிகர் கமலஹாசனை சிங்க பெண்ணாக செயல்பட்டு தமிழகத்தில் வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தார் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பெண் ராணுவ விமானத்தை ஓட்டிய முதல் பெண்ணாக திகழ்வதாகவும், முத்தலாக் முறையால் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் கை குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்ற போது, 60 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்ததாகவும், சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக வாக்கு வங்கிக்காக வேடிக்கை பார்த்ததாகவும் கூறிய வேலூர் இப்ராஹிம், இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்து பிரதமர் மோடி அவர்களுக்கு தந்தை போன்று உள்ளதாக கூறினார்.

மேலும், 5.1 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் பிரதமர் மோடி என்றும், இந்த தேசத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இஸ்லாமிய சமூகம், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள் என அவப்பெயரோடு சுற்றி வருவதற்கு காரணம், திமுக, காங்கிரஸ், திருமாவளவன் போன்றவர்கள் தான் எனவும், இதனை மாற்ற வேண்டும் இஸ்லாமிய பெண்களால்தான் அது முடியும் என தெரிவித்தார்.

பீகாரில் ஏற்பட்ட மாற்றத்தை போன்று தமிழகத்திலும் ஒரு மாற்றம் ஏற்படும் என்றும், வருகின்ற 2024ம் ஆண்டு பெண்களின் உரிமை காக்கின்ற கட்சியான பாஜகவிற்கு வாக்களித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆளும் எனவும் அவர் தெரிவித்தார்.

Views: - 310

0

0