காவிரி, அமராவதி ஆறுகளின் கடும் வெள்ளப்பெருக்கு ; 200 ஏக்கர் கோரைப்புல் விவசாயம் பாதிப்பு ; இழப்பீடு கோரும் விவசாயிகள்..!!

Author: Babu Lakshmanan
7 September 2022, 4:30 pm
Quick Share

கரூர் ; கரூர் மாவட்டத்தில் பெய்த கடுமையான மழைப்பொழிவு மற்றும் காவிரி, அமராவதி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் இருந்த கோரைப்புல் விவசாயம் பாதிக்கப்பட்டது.

கரூர் அருகே உள்ள நெரூர், திருமுக்கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரைப்புல் விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. கோரைப்புல், பாய்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோரைக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு மற்றும் காவிரி, அமராவதி ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கால், திருமுக்கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த கோரைப்புல் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான கோரைப்புல் சேதம் அடைந்துள்ளது. இதனால், கோரை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனனர்.

குறிப்பாக, சமீபத்தில் பெய்த மழையின் காரணத்தால் கோரைப்புல் அதிகளவில் சேதம் அடைந்தது. அதேபோல் அடுத்தடுத்து பெய்த மழையாலும் காவேரி மற்றும் அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்காலும் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவிலான கோரை பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 560

0

0