தமிழக மக்களே உஷார்…இன்னைக்கு 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
Author: Aarthi Sivakumar28 October 2021, 9:41 am
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை, நாளை மறுதினம் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், ஓரிரு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
31ம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0
1