நகைக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு : கைதான நபருக்கு கையில் மாவுக்கட்டு.. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக விளக்கம்!!

Author: kavin kumar
23 January 2022, 8:38 pm
Quick Share

நகைக் கடை உரிமையாளரை வெட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், வெட்டியதாக கைதான நபர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஜிஎஸ்டி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேசாராம் என்பவரது மகன் தர்மாராம் செட் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம் போல் தர்மாராம் சேட் கடையை திறந்துள்ளார். அப்போது, வடபாதி கிராமம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்த சாம்மூர்த்தி என்பவரின் மகன் சிலம்பரசன், நகை ஒன்று அடகுவைக்க வந்துள்ளார்.அப்போது தர்மாராம் சேட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நகையை அடகு வாங்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அவருடன் கடுமையான வாக்குவாதம் செய்ததோடு எங்களிடம் நகை வாங்க மறுத்த உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என எச்சரித்து விட்டு சென்றுள்ளனர்.அதனைத் தொடர்ந்து அன்று மாலை குடிபோதையில் கடைக்கு வந்த சிலம்பரசன் தர்மாராம் சேட்டை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த தர்மாராம் சேட்டை மீட்ட அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய படாளம் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த சிலம்பரசனை தேடி வந்தனர். இதனையடுத்து நேற்று செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த சிலம்பரசனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணைக்காக செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலையத்திற்கு சிலம்பரசனை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிலம்பரசன் பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து சிலம்பரசனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 1415

0

0