சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை… குடிபோதையில் நண்பர்களுடன் தகராறு… 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Author: Babu Lakshmanan
21 October 2022, 10:23 am
Quick Share

சென்னை : சென்னை அருகே புளியந்தோப்பில் பிரபல ரவுடி சக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்கின்ற லொடங்கு மாரி (40). இவருக்கு திருமணமாகி பார்வதி என்கின்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். புளியந்தோப்பு பகுதியில் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

இவர் மீது புளியந்தோப்பு, பேசன் பிரிட்ஜ், கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 29 வழக்குகள் உள்ளன. நேற்று இரவு லொடங்கு மாரி மற்றும் அவரது நண்பர்களான புளியந்தோப்பு கன்னிகாபுரம் 7வது தெருவை சேர்ந்த கொருக்குப்பேட்டை மாரி, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (எ) பிள்ளை கார்த்திக் , மணிகண்டன் (எ) கருப்பா, மார்ட்டின், லட்சுமணன் ஆகிய 5 பேர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 2வது தெரு பகுதியில் உள்ள கால்வாய் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

இரவு 11 மணியளவில் போதை தலைக்கு ஏறியதும் ஒருவருக்குள் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, லொடங்கு மாரிக்கும் கொருக்குப்பேட்டை மாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொருக்குப்பேட்டை மாரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக லொடங்கு மாரியை வெட்டினார்.

இதனால் லொடாங்குமாரிக்கு சரமாரியாக வெட்டு காயம் விழுந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அங்கு வந்த புளியந்தோப்பு போலீசார் லொடங்கு மாரியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த லொடங்குமாரி இன்று காலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் கொருக்குப்பேட்டை மாரி உள்ளிட்ட அவரது நண்பர்கள் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே சக நண்பரை கொலை செய்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 448

0

0