திருடப்போன இடத்தில் செல்போனை மறந்த திருடன்… 7 மணி நேரத்தில் போலீஸில் சிக்கிய சம்பவம்… 20 சவரன் நகையும் மீட்பு

Author: Babu Lakshmanan
31 May 2022, 5:47 pm
Quick Share

சென்னை : திருடப் போன இடத்தில் செல்போனை தவறவிட்டதால், 20 சவரன் நகையை கொள்ளையடித்த திருடன் 7 மணிநேரத்தில் போலீஸில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பெரம்பூர் பாரதி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40) இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருப்பதிக்கு சென்று இருந்த நிலையில், ராஜ்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் , மெயின் கதவை தாழ்பாள் போட்டு விட்டு வெளியே உள்ள இரும்பு கேட்டை பூட்டிவிட்டு சலூன் கடைக்கு சென்றுள்ளார். வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் வெளி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ராஜ்குமாரை கீழே தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்தார்.

அப்போது ஏற்கனவே இரு சக்கர வாகனத்தில் தயார் நிலையில் இருந்த மற்றொரு நபரின் வண்டியில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விட்டார் ராஜ்குமார். அவர்களைப் பின்தொடர்ந்தும் பிடிக்க முடியவில்லை வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் அங்கு வந்த செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருடன் திருடிய பீரோ அருகே ஒரு செல்போன் இருந்தது. அதனை எடுதது செல்போன் நம்பரை வைத்து அந்த செல்போனை பயன்படுத்திய நபரின் வீட்டு முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர்.

வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1-வது தெரு பகுதிக்குச் சென்று போலீசார் பார்த்த போது அந்த வீட்டில் வடிவேல் பாண்டியன் (31) என்ற நபர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை தட்டி எழுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருடிய நபர் அவர் தான் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரது வீட்டில் திருடப்பட்ட 20 சவரன் நகைகளையும் போலீசார் மீட்டனர். மேலும் அவருக்கு வாகன ஓட்டியாக செயல்பட்ட வியாசர்பாடி கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (22) என்ற நபரையும் போலீசர் கைது செய்தனர். திருடப்போன இடத்தில் தவறுதலாக செல்போனை வைத்து விட்டு வந்ததால் திருடிய ஏழு மணி நேரத்திற்குள் போலீசார் 2 திருடர்கள் கைது செய்து 20 சவரன் நகைகளையும் மீட்டுள்ளனர்.

Views: - 513

0

0