அமைச்சரின் கார் மோதி புது மனைவி கண்முன்னே கணவர் பலி ; சென்னையில் நடந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
18 May 2023, 4:04 pm
Quick Share

சென்னை : சென்னையில் அமைச்சரின் கார் மோதிய விபத்தில் புதுமனைவி முன்பு கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் சென்று கொண்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அடுத்த மணமை அருகே சென்ற அமைச்சரின் கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த புதுமண தம்பதியினர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், கணவர் ஜான்சன் மனைவி ரூத்பொன் செல்வியின் கண் முன்னே சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த ரூத்பொன் செல்வி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, விபத்து நடந்த காரில் அமைச்சர் மெய்யநாதன் செல்லவில்லை என்றும், மயிலாடுதுறை சென்றுள்ள அமைச்சரை அழைத்து வருவதற்காக கார் டிரைவர் காரை ஓட்டி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடலூரில் உள்ள தனது வீட்டிலிருந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் ஜான்சன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 368

0

0