மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலி ; சென்னையில் கொட்டும் மழைக்கு நடுவே நிகழ்ந்த சோகம்..

Author: Babu Lakshmanan
1 November 2022, 11:07 am
Quick Share

சென்னை : வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி பி.வி காலனி 25வது தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (52). இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். நேற்று இரவு தனது வாடகை ஆட்டோவை புளியந்தோப்பில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது பி.வி காலனி 18 வது தெரு வழியாக வரும் போது அங்கு இறப்பிற்கு ஒரு வீட்டில் பந்தல் போட்டு இருந்தது அதனை தாண்டி தேவேந்திரன் வரும் போது அதிகப்படியான மழை பெய்திருந்தால் முட்டி அளவு தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. அப்போது தேவேந்திரன் பந்தல் போடப்பட்டிருந்த சேர்மினார் கம்பியை பிடித்த போது மின்சாரம் பாய்ந்து கீழே தண்ணீரில் விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்சாரத்தை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எம்கேபி நகர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தேவேந்திரனை மீட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

இதனை யடுத்து தேவேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக தேவேந்திரனின் மகன் கெளதம் எம் கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எம். கே.பி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, சென்னை தண்டையார் பேட்டையில் மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்துள்ளது. எனவே, மழை பெய்யும் காலங்களில் மின்கம்பிகள் மற்றும் மின்சார தேக்கிகளை சரிவர பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 339

0

0