வார இறுதியில் குட்நியூஸ்… ஒரே நாளில் ரூ.664 குறைந்தது தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
6 May 2023, 11:07 am
Quick Share

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.

கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,080 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.664 குறைந்து ரூ.45,536க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.83 சரிந்து ரூ.5,692க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் ரூ.46 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

அதேவேளையில், வெள்ளி விலை இன்று ரூ.1300 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.82,400க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.82.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன் வட்டியை 0.25 சதவீதமாக உயர்த்தியதே தங்கம் விலை உயர காரணம் என்று கூறப்படுகிறது.

Views: - 721

1

0