புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை ; 2 நாளில் மட்டும் ரூ.1,080 அதிகரிப்பு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
4 May 2023, 11:04 am
Quick Share

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.44 ஆயிரம், ரூ.45 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.

கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்ந்தே காணப்பட்ட தங்கத்தின் விலை, ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில் இருந்தே சற்று சரிந்து வந்தது. ஆனால், போகப் போக புதிய உச்சத்தை எட்டி வந்தது.

கடந்த ஏப்.,14ம் தேதி புதிய உச்சமாக தங்கத்தின் விலை ரூ.45,760 ஆக உயர்ந்தது. இதுவே உச்சவிலையாகும்.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும், இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46 ஆயிரத்திற்கும், கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,750க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் முதல்முறையாக தங்கம் ரூ.46 ஆயிரத்தை எட்டியுள்ளது.

அதேவேளையில், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.82.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 82,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன் வட்டியை 0.25 சதவீதமாக உயர்த்தியதே தங்கம் விலை உயர காரணம் என்று கூறப்படுகிறது.

Views: - 682

1

0