கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை… ரூ.8.40 லட்சம் பறிமுதல் … சிக்கினாரா முதன்மை உதவியாளர்..?

Author: Babu Lakshmanan
31 May 2022, 9:01 am
Quick Share

கோவை : கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ரூ.8.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதன்மை உதவியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் பால் கம்பெனி நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யவும், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களுக்கு வழங்கப்படும் அரியர் பணம் வழங்க உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில், நேற்று மாலை 6.30 மணியளவில் லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில், ஆய்வாளர் பரிமளா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின் போது கோவை ஆவின் நிறுவனத்தின் முதன்மை உதவியாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது காரில் ரூ.5.90 லட்சம் மற்றும் அவரது அலமாரியில் இருந்து ரூ.2.50 லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் பணம் கொடுத்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

Views: - 515

0

0