சில நாட்களில் திருமணம்… வாகன விபத்தில் முடங்கிய இளைஞரின் வாழ்க்கை… ரூ.51.39 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
13 April 2022, 1:50 pm
cbe court - updatenews360
Quick Share

கோவை : திருமணம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் விபத்தில் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு ரூ.51.39 லட்சம் இழப்பீடு வழங்க சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை சூலூர் எஸ்.எஸ்.கே நகரைச் சேர்ந்தவர் அருண் (32). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 2017ம் ஆண்டு மே 29ந் தேதி கோவை-திருச்சி சாலையில் ராமநாதபுரம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகரைச் சேர்ந்த சுரேஷ் (44) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் அருணின் இடது கால் முட்டி, கீழ் தாடை, கீழ் பின்பக்க தலை, இடது இடுப்பில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. விபத்து நடந்தபோது மெஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி அருண் மாதம் ரூ.21 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்துள்ளார். விபத்து காரணமாக தனக்கு ஏற்பட்ட காயங்கள், இழப்புக்கு இழப்பீடாக ரூ.29.50 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் அருண் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சுரேஷின் அதிவேகம், கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த போது அந்த வாகனத்தின் 3-வது நபருக்கான விபத்து காப்பீடு நடை முறையில் இருந்துள்ளது. விபத்தால் மனுதாரருக்கு 75 சதவீத உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கோவை அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ வாரியம் பரிசோதனை செய்து சான்று வழங்கியுள்ளது.

அவரால் தொடர்ந்து பழையபடி வருமானம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மனுதாரரால் அதிக நேரம் நிற்கவோ, நடக்கவோ, அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலையில் அவருக்கான வசதி வாய்ப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஜூன் 5-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக திருமணம் நின்றுவிட்டது. மனுதாரர் தற்போது உதவியாளர் இன்றி எந்தவித பணிகளையும் தன்னிச்சையாக செய்ய இயலாத நிலையில் உள்ளார்.

எனவே, வருமானம் ஈட்டும் செயல்திறன் இழப்பு, வலி, வேதனை, மருத்துவ செலவுகள், எதிர்கால திருமண எதிர்பார்ப்பு இழப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ.51.39 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் சுரேஷ், காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து அளிக்க வேண்டும், இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Views: - 655

0

0