தொடரும் சாலை விபத்துக்களில் வனவிலங்குகள் பலியாகும் சோகம் : கோவையில் வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு..

Author: Babu Lakshmanan
28 February 2022, 9:20 am
Quick Share

கோவை : கோவையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மயில், மான், காட்டுப் பன்றி உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காததால், குடியிருப்பு பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில், கோவை கனியூர் சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற ஒன்றரை வயது பெண் புள்ளி மான் மீது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில், நிகழ்விடத்திலேயே மான் உயிரிழந்தது. இதுகுறித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனவிலங்குகள் இருக்கும் சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்று விதிகள் இருந்து வரும் நிலையில், அதனை மீறும் இதுபோன்ற வாகன ஓட்டிகளால், வனவிலங்குகள் தொடர்ந்து உயிரிழப்பது வாடிக்கையாகி வருவதாக வனஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 665

0

0