முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மிரட்டல் : சேலத்தில் குற்றவாளியை கைது செய்த போலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2021, 1:40 pm
கோவை : கோவை மாவட்ட ஆட்சியருக்கும், கேரள முதலமைச்சருக்கும் செல்போனில் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கும், கேரள முதலமைச்சருக்கு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட ஒரு ஆசாமி தனக்கு கடன் பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க ஒருவரை மீடியேட்டர் ஆக நியமிக்க வேண்டும். இல்லை என்றால் கேரளா, கோவை ரயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் குண்டு வெடிக்கும் என்று பேசி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அந்த செல்போன் எண்ணும் மற்றும் சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணும் ஒன்று தான் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது சேலத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த செல்போன் எண் மாமாங்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்ராஜ் நாயர் (வயது 46)என்பதும் அவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது : வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரேம் ராஜ் நாயர் நேற்று முன்தினம் சேலம் ஜங்ஷன் முல்லை நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துள்ளார். இதையடுத்து செல்போன் டவர் மூலம் கண்காணித்து அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து நாங்கள் அவரை கைது செய்துள்ளோம் என கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
0
0