பாலியல் தொல்லைக்குள்ளான மாணவி தற்கொலை சம்பவம்: வருத்தத்தில் கொந்தளிக்கும் விஜயகாந்த்….
Author: kavin kumar13 November 2021, 11:38 pm
சென்னை: கோவையில் பாலியல் தொல்லைக்குள்ளான பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், நேற்று முன்தினம் மாலை மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தங்களது மகளின் தற்கொலைக்கு அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு இன்னும் பலருக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.இதனிடையே, மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் பாலியல் தொல்லைக்குள்ளான பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவையில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தபட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் ஏற்கனவே மாணவியின் பெற்றோர் புகார் அளித்திருந்ததாகவும், ஆனால் அந்த புகார் மீது பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவியின் மரணத்தை தடுத்திருக்கலாம். மேலும் தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதத்தில் யாரையும் சும்மா விடக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
தோழியின் தாத்தா, தோழியின் அப்பா மற்றும் ஆசிரியர் ஆகியோரை சும்மா விடக் கூடாது என்று மாணவி கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். எனவே அப்பாவி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தால் மட்டும் போதாது, அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக்கினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுக்கப்படும். பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்அதிகரிப்பது சமுதாயத்திற்கு கேடானது. எனவே, மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க மாணவி மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். வேலியே பயிரை மேய்ந்தது போல பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
0
0