நடத்தையில் சந்தேகம்.. திருமணமான 4 மாதங்களில் மனைவியைக் கொன்ற கணவன்.. போதையில் உளறியதால் சிக்கிக் கொண்ட சம்பவம்

Author: Babu Lakshmanan
4 April 2022, 9:22 am
Quick Share

கோவையில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், பத்தாண்டுகள் காதலித்து திருமணம் செய்த தனது காதல் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாகார்ஜூன்.இவர் அதே பகுதியை சேர்ந்த சர்மிளா என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.வீட்டில் யாரும் ஏற்று கொள்ளாததால் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சர்மிளா தனது செல்போனில் சந்தேகத்திற்கிடமாக பேசி வந்ததையடுத்து, யாரிடம் பேசுகிறாய் என நாகார்ஜூன் கேட்கவே, இருவருக்குமிடையே தொடர் பிரச்சினை இருந்து வந்துள்ளது.இதனிடையே நேற்று பிற்பகல் வீட்டிற்கு சென்ற நாகார்ஜூன் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூழலில், திடீரென அங்கிருந்த கத்தியை எடுத்து தனது மனைவியான சர்மிளாவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.

பின்னர் வழக்கம்போல் இரவில் மது அருந்த சென்ற நாகார்ஜூன் போதையில் தனது நண்பர்களிடம் இது குறித்து பேசிய நிலையில், மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.பின்னர் அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து சென்ற போத்தனூர் காவல்நிலைய போலீசார் சுந்தராபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த நாகர்ஜூனை கைது செய்தனர்.

மேலும் வீட்டில் சடலமாக கிடந்த சர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த இளம் பெண்ணை நான்கே மாதத்தில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 880

0

0