கல்லூரி அரியர் தேர்வில் ஆள்மாறாட்டம்… ராணுவ வீரர் நண்பருக்காக தேர்வு எழுதிய நபர் கைது..!

Author: Babu Lakshmanan
18 June 2022, 2:27 pm
Quick Share

திருச்சி : திருச்சியில் ராணுவ வீரருக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள ஜம்புமடை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் விஸ்வநாதன் (31). இவர் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். இவரது நண்பர் தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் கோபிநாத்(30) ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கோபிநாத் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்தபோது, தேர்ச்சி பெறாமல் நிலுவையில் வைத்திருந்த பிஏ பொருளாதாரத்தில் பாலின சமத்துவ கல்வி தேர்வினை நண்பனும், ராணுவ வீரரான கோபிநாத்துக்கு பதிலாக விஸ்வநாதன் எழுதியுள்ளார். தேர்வு அறையில் இருந்த மேற்பார்வை அதிகாரிக்கு இது குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணையில் ராணுவ வீரருக்கு பதிலாக விசுவநாதன் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லூரி முதல்வர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் விஸ்வநாதன் மீது முசிறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விஸ்வநாதனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். நண்பனுக்கு பதிலாக தான் தேர்வு எழுதியதை விசுவநாதன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 573

0

1