சினிமா பாணியில் தொழிலதிபர் மகனை கடத்திய கும்பல் ; ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம்.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்!!

Author: Babu Lakshmanan
22 March 2023, 5:14 pm
Quick Share

திருவாரூர் ; வலங்கைமானில் திரைப்பட பாணியில் கல்லூரி மாணவனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் விஜயராகவன். இவர் பெட்ரோல் பங்க், ஏஜென்ஸி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவதுடன் சமூக தொண்டாற்றியும் வருகிறார். இவரது மகன் பெரியண்ணா, தனியார் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி படித்து வருகிறார். இவருடன் சேர்ந்து படிக்கும் சக மாணவர் வீட்டு திருணத்திற்காக கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு திருமண வீட்டார் ரூ.5 ஆயிரம் சாக்கோட்டை நெடுமாறன் என்பவரிடம் கொடுக்க தொழிலதிபர் மகன் பெரியண்ணாவை அனுப்புகிறார்கள். வலங்கைமான் பகுதியில் மிகப்பெரிய தொழிலதிபரான விஜயராகவனின் மகன் பெரியண்ணாவை கடத்தி சென்று கொலை செய்து விடுவோம் என மிரட்டி பணம் பறிக்கலாம் என திட்டமிட்டு, பணம் கொடுக்க வரும் பெரியண்ணாவை, விருச்சிபாச்சிபுரம்  நெடுமாறன், விக்னேஷ்வரன், சந்திரசேகரபுரம் சந்தோஷ்குமார், வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் பெரியண்ணாவை கடத்தினர்.

கடத்திய பெரியண்ணவை கருவேலங் காட்டுப்பகுதியில் மறைந்து வைத்துக்கொண்ட ஆள்கடத்தல் கும்பல், விஜயராகவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் பணம் கொடுங்கள் இல்லை என்றால் உங்கள் மகன் பெரியண்ணாவை கொலை செய்துவிடுவோம் என மிரட்டி பணம் கேட்கிறார்கள். 

ஆனால் இதற்கு சிறிதும் அஞ்சாத விஜயராகவன், பணம் கொடுக்க முடியாது எனவும், தான் 160க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்களை படிக்க வைத்து வருவதாகவும், அதில் யாராவது என்னை நன்றாக பார்த்து கொள்வார்கள் எனவும், நீங்கள் எனது மகனை என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளுங்கள். அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என, ஆள்கடத்தல் கும்பலின் பேரத்திற்கு அடிபணியாமல் விஜயராகன் பேசியுள்ளார்.

இதனால் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஆள்கடத்தல் கும்பல் கடத்திய பெரியண்ணாவின் கை, கால்களை கைட்டி நாச்சியார்கோவில் என்ற இடத்தின் அருகே போட்டுவிட்டு தலைமறைவாகினர். தகவல் அறிந்து வந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் பெரியண்ணாவை மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து விஜயராகவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வலங்கைமான் போலீசார் விருச்சிபாச்சிபுரம் விக்னேஷ்வரன், சந்திரசேகரபுரம் சந்தோஷ்குமார், வலங்கைமான் நிவாஸ்  ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய விருச்சிபாச்சிபுரம் நெடுமாறன் என்பவரை போலிசார் தீவீரமாக தேடி வருகின்றனர்.  

திரைப்பட பாணியில் கல்லூரி மாணவனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது. ஏற்கனவே, வலங்கைமான் காவல் நிலையத்தில் விருச்சிபாச்சிபுரம் பகுதியை சோ்ந்த  நெடுமாறன்  மீது  வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Views: - 384

0

0