முக்கொம்புவில் கட்டப்பட்ட புதிய கதவணை 26ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் : அமைச்சர் கேஎன் நேரு

Author: Babu Lakshmanan
17 June 2022, 2:18 pm
Quick Share

திருச்சி முக்கொம்பு புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 26ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி முக்கொம்புவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இருந்த 182 ஆண்டுகள் பழமையான கதவணையின் 9 மதகுகள் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது இடிந்தது. அதனையடுத்து, அதற்கு அருகிலேயே புதிய கதவணை கட்ட திட்டமிடப்பட்டது.

முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் கதவணைக்குப் பதிலாக ரூ.387.60 கோடியில் புதிய கதவணையும், கதவணையில் உடைந்த பகுதியில் ரூ.38.85 கோடியில் தற்காலிக தடுப்பணையும் கட்டப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். போக்குவரத்துக்கும் பயன்படும் வகையில் பாலத்துடன் கூடிய கதவணையாக அது கட்டப்பட்டு வந்தது. அதனையடுத்து, அந்த பணிகள் தொடங்கி நடைப்பெற்று வந்தன.

இந்த நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- வரும் ஜூன் 26ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி வருகை தந்து புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் கதவணை பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார்.

2018ம் ஆண்டு இந்த பாலம் கட்ட திட்டமிடப்பட்டு தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலமைச்சர் வருவதற்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும்.
அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்டு கட்ட துவங்கிய இந்த புதிய பாலம் பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக உள்ளது. அதனால் போக்குவரத்துக்கு சிரமமாக இருக்கும்.

அதே நேரம், இந்த பாலத்தில் மேலும் சில புதிய விஷயங்களை கொண்டு வந்து போக்குவரத்துக்கும், மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதற்கு புதிய திட்டத்தை முதல்வர் அறிவிப்பார். திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வந்த அனைத்து தூர்வாரும் பணிகளும் நிறைவடைந்தன.

திருச்சி மாநகரில் சிந்தாமணி – மாம்பழச்சாலையை இணைக்கும் வகையில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது தற்போது 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் உயர்மட்ட பால பணிகள் உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும், என்றார்.

இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின்குமார், மாநகர மேயர் அன்பழகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 533

0

0