தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!
Author: Aarthi Sivakumar2 November 2021, 8:45 am
கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்பட 5 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வருகிற நவம்பர் 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தொடர் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று மழை எதிரொலியாக அரியலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலில் கனமழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது என திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
0
0