நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவு!!
Author: kavin kumar27 August 2021, 9:37 pm
சென்னை: வன்கொடுமை தடை சட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஆகியோருக்கு மீண்டும் நீதிமன்ற காவலை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை மீராமிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவருக்கு கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி கைது தமிழக பொலிஸாரால் செய்யப்பட்டனர்.
பின்னர் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த போது, இந்த வழக்கு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என, கூறி இவர்களது ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து இன்றுடன் மீரா மிதுனின், நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், இன்று மீரா மிதுன் மீதான இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு, செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
0
0