‘ஓம் சக்தி.. சமயபுரத்து மகமாயி… சென்னை ஜெயிக்கனும் ஆத்தா’… சாமியாடிய சிஎஸ்கே ரசிகர்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 1:23 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற வேண்டி, வெறித்தனமான ரசிகர் ஒருவர் கடவுளை வேண்டிய நிகழ்வு வைரலாகி வருகிறது.

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி சென்னை அணி பேட் செய்ய தொடங்கிய போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. எனவே, போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு, 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மழைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியதும் சென்னை அணியின் வீரர்கள் புயல் போல விளையாடினர். கெயிக்வாட் (26), கான்வே (47), ரகானே (27), ராயுடு (19) ஆகியோர் சிறப்பாக ஆடினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

துபேவும், ஜடேஜாவும் வெற்றிக்காக போராடினர். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைபட்ட போது, மோகித் ஷர்மா முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அணியை த்ரில் வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம், சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற பிறகு தோனி ஆனந்த கண்ணீர் வடித்தார். அதோடு, ஜடேஜாவை தூக்கி தனது மகிழ்ச்சியை கொண்டாடினார்.

இறுதி போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கண்டு ரசித்தாலும், உலகம் முழுவதும் பல்வேறு இடத்திலிருந்து ரசிகர்கள் தொலைக்காட்சியிலும் கண்டு ரசித்தனர்.

அதன் ஒரு பகுதியாக ரசிகர் ஒருவர் இறுதி ஆட்டத்தை மிகவும் ஆர்வத்துடன், ‘ஆத்தா மகமாயி ஓம் சக்தி எப்படியாவது இந்த போட்டியை ஜெயிச்சுடனும்,’ என பக்தி பரவசத்துடன் கண்டுகொண்டு இருந்தார். கடைசி பாலில் சென்னை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் தன்னைத்தானே மறந்து சந்தோசத்தில் குதித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதேபோல, மூதாட்டி ஒருவர் சென்னை அணியின் வெற்றியை கொண்டாடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Views: - 424

0

1