மூக்கு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பார்வை பறிபோன பரிதாபம் ; அரசு மருத்துவமனையின் அடுத்த அலட்சியம்… கண்ணை கட்டி உறவினர்கள் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
18 November 2022, 10:18 am
Quick Share

கடலூர் அருகே மூக்கு அறுவை சிகிச்சைக்காக சென்று பெண்ணுக்கு இருகண்களின் பார்வை பறிபோனதாக குற்றம்சாட்டி, கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் சான்றோர் பாளையத்தைச் சேர்ந்த உமாவதி, கடந்த செப்டம்பர் மாதம் கடலூர் அரசு மருத்தவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சை செய்த 4,5 நாட்களிலேயே டிஸ் செய்யப்பட வேண்டிய இவரை, கண்பார்வை பறிபோனதால் ஒருமாதம் வரை மருத்துவமனையில் வைத்தே சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இதனிடையே, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இவர், தனக்கு கண்பார்வை இதுவரை திரும்பவில்லையே என்று மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த மருத்துவர்கள், ரத்தக்கட்டு காரணமாக அப்படி உள்ளதாகவும், காலப்போக்கில் கண்கள் சரியாகிவிடும் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

வீடு திரும்பி 2 மாதங்களாகியும் இதுவரை கண்கள் இரண்டும் தெரியாததால், அவரது உறவினர்களுடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியரிடம் உயரதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டார்.

ஏற்கனவே, கடலூர் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு கையில் தவறான அறுவை சிகிச்சை செய்தது, ஒரு பெண்ணுக்கு வயிற்றுடன் சேர்த்து குடலை வைத்து தைத்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்த நிலையில், இதுவரையில் எந்த நடவடிக்கைவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

தற்போது, மூக்கு ஆபரேசன் செய்த பெண்ணுக்கு பார்வை பறிபோன சம்பவத்தால், மருத்துவர்கள் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், கண்களில் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது :- கண் பார்வை பறிபோன பிறகு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தோம். அதில், கண்ணிற்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக கூறிய அவர்கள், மேற்கொண்டு மீண்டும் அறுவை சிசிக்சை செய்தாலும் ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கிடைக்கும், என்று கூறினார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குநர் ரமேஷ்பாபு கூறியதாவது ;- பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏதாவது தவறு நடந்திருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.

Views: - 358

0

0