தவறான சிகிச்சையால் கைவிரல்கள் அழுகிய அவலம்.. அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் ; கடலூரில் ஷாக்…!!

Author: Babu Lakshmanan
19 November 2022, 4:02 pm
Quick Share

கடலூரில் தவறான சிகிச்சையால் பெண்ணின் கைவிரல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டியை அடுத்துள்ள திராசு பகுதியைச் சேர்ந்தவர் குப்பு. இவருக்கு கடந்த மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, நரம்பு ஊசி செலுத்துவதற்காக அவரது வலது கையில் துளைக்கருவி பயன்படுத்தப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய சில தினங்களில் அவரது வலது கையின் விரல்கள் அழுகின. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும் மருத்துவர்களை சந்தித்து கேட்டுள்ளார். இதனை பார்த்த மருத்துவர்கள் தானாக சரியாகி விடும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், அச்சமடைந்த குப்பு மற்றும் அவரது உறவினர்கள், கை விரல்கள் அழுகியது குறித்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது, கையில் குத்தப்பட்ட துளைக்கருவியினால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சென்னையில் தவறான சிகிச்சையினால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில், கடலூரில் பெண் ஒருவருக்கு தவறான சிகிச்சை அளித்துள்ள சம்பவம் மருத்துவத்துறை மீதான நம்பிக்கைத் தன்மையை இழக்கச் செய்வதாக அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

Views: - 402

0

0