சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட பெண் யானை ரோகிணி உயிரிழப்பு : உடல்கூறு ஆய்வுக்கு பின் வெளியான முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 10:11 pm
Rohini Elephant Dead - Updatenews360
Quick Share

உடல்நலக்குறைவால் உயிரிழந்த ரோகினி யானை நுரையீரல் பாதிப்பால் இறந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வனசரகத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த ரோகினி என்ற பெண் யானை நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுக்தி யானைகள் முகாமில் வைத்து 3 வருடங்கள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதத்திற்கு முன்பு ரோகினி யானை சரிவர உணவு உண்ணாமல் உடல்நலக்குறைவு ஏற்படவே வனத்துறை அதிகாரிகள் திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம் ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

26 வயதுடைய ரோகினி யானை சுவாசக்கோளாறு, கல்லீரல் பிரச்சனை சிறுநீரகப் பிரச்சனைகள் மற்றும் பல் சரியாக சீரமைக்கப்படாததால் மாஸ்டிக் பிரச்சனை போன்ற உடல்நல கோளாறு பிரச்சனைகளால் அவதியடைந்து வந்தது.

இந்நிலையில் ரோகினி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் மருத்துவ குழுவினர் ரோகினி யானையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து வனப்பகுதியில் 12 அடி ஆழம் குழி தோண்டப்பட்டு ரோகினி யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் செய்தியாளர்களிடம் கூறுகையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ரோகினி பெண் யானை போதிய உணவை உண்ணாமல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.
கால்நடை மருத்துவ குழுவினரால் ரோகினி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தது.

இறந்த ரோகினி யானையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதில் அதற்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு யானை உயிரிழந்திருக்கிறது என தெரிவித்தார்.

Views: - 522

0

0