ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி தனுஷ் அனுப்பிய நோட்டீஸ்.. மதுரை தம்பதியர் அளித்த பரபரப்பு விளக்கம்.!

Author: Rajesh
22 May 2022, 5:20 pm
Quick Share

மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி கதிரேசன் – மீனாட்சி. நடிகர் தனுஷ் எங்களின் மகன்தான் என்றும், அவர் மாதந்தோறும் பராமரிப்புத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தனுஷ் மீது இவ்வாறு அவர்கள் தொடர்ந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயன்றதாகவும், நீதிமன்றங்களில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்களைக் கூறி தனுஷுக்கும் கஸ்தூரி ராஜாவுக்கும் அந்தத் தம்பதியினர் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து தங்கள் வழக்கறிஞர் மூலம் கஸ்தூரி ராஜாவும், தனுஷும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் மன்னிப்புக் கோராவிட்டால் பத்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை தம்பதியர் தரப்பிலோ, “இதுவரை எந்த நோட்டீஸும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள்தான் அவர்களுக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்கிறார்கள்.

இதுபற்றி கஸ்தூரிராஜா தரப்பில் விசாரித்தால், “வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இதுகுறித்து இப்போது பேசுவது முறையாகாது” என்கிறார்கள்.

Views: - 693

0

0