இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… தூக்கி வீசப்பட்ட டூவிலர்… கதிகலங்க வைக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
14 June 2022, 12:52 pm
Quick Share

கொடைரோடு அருகே விபத்துகுள்ளான ஒரு கார் எதிரே வந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி கார் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டி மாவூர் அணை பிரிவு பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் அந்த கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில், அந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியதில் நிலை தடுமாறிய அந்த கார் சாலையில் மற்றொரு பாதைக்கு சென்றது.

அப்போது, எதிரே மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபாண்டி (50), இவரது மனைவி ரேவதி (45), மகள் நந்திகா (8), வத்தலகுண்டுவைச் சேர்ந்த சசிரேகா (48), சக்திவேல் (40), திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த குமார் (71), இவரது மனைவி மீனா (67) கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த முருகன் (55) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் காவல் துணை ஆய்வாளர் விஜய பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த விபத்தால் திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 695

0

0