வார்டுக்குள் எந்த வேலையும் நடப்பதில்லை… மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதம் ; சக திமுக கவுன்சிலர்கள் ‘ஷாக்’..!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 4:24 pm
Quick Share

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக மேயர், துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகள் கவுன்சிலர்களுக்கான மாதாந்திர இயல்பு கூட்டம், இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக, திமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக, கூட்டத்தில் பேசிய மூன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த இந்திராணி, கடந்த 15 மாதங்களாக மாமன்ற கூட்டத்திற்கு ரப்பர் ஸ்டாம்ப் போல் வந்து உட்கார்ந்து செல்கிறோம். எந்த வேலையும் வார்டுக்குள் நடைபெறுவது கிடையாது. மாமன்ற உறுப்பினர்களின் சுகாதாரத்துறை தலைவராக இருக்கக்கூடிய நான், 48 வார்டுகளில் நடைபெறக்கூடிய சுகாதார சீர்கேடுகளை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்தும் இதுவரை எந்த வேலையும் நடைபெறுவது கிடையாது என மேயர் மற்றும் துணை மேயரிடம் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார். ஒரு கட்டத்தில் மேயர் மற்றும் துணை மேயர் கோபமடைந்து மாமன்ற உறுப்பினரை உரையை நிறுத்தி உட்காரும்படி கூறியுள்ளனர்.

இருந்த போதும் திமுக மாமன்ற உறுப்பினர் இந்திராணி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துக் கொண்டே போக, ஒரு கட்டத்தில் துணை மேயர் ராஜப்பாவிற்கும், மாமன்ற உறுப்பினர் இந்திராணிக்கும் வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, கோபத்துடன் அமர்கிறேன் என்று கூறி இருக்கையில் அமர்ந்தார் இந்திராணி.

மேலும், திமுகவைச் சேர்ந்த பல மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் எந்தவித வேலைகளும் நடைபெறுவது கிடையாது என குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூட்டத்தை பாதியிலேயே முடித்து சென்ற அவலம் நிலவியது.

Views: - 254

0

0