மல்லிகைப் பூ விலை ரூ.5,000 வரை உயர்வு… தொடர் பனிப்பொழிவால் செடியிலேயே கருகும் பூக்கள்.. மனம் வாடும் விவசாயிகள்!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 11:46 am
Quick Share

திண்டுக்கல் ; தொடர் பனிப்பொழிவு மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை பூ கிலோ ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம்,கல்லுப்பட்டி, ரெட்டியார்சத்திரம், முத்தனம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

மேலும், திண்டுக்கல் பூச்சந்தையில் இருந்து நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினந்தோறும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை பூ விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு செடியிலேயே கருகி விடுகிறது. இதன் காரணமாக, திண்டுக்கல் பூச்சந்தைக்கு மல்லிகை பூ வரத்து குறைந்ததோடு மட்டுமல்லாமல், நாளை முக்கிய முகூர்த்த தினம் என்பதால் மல்லிகைப் பூவின் விலை பன்மடங்கு உயர்ந்து கிலோ ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போல் கனகாம்பரம் 2500 ரூபாய்க்கும், முல்லைப்பூ 1500 ரூபாய்க்கும், ஜாதி பூ 1000 ரூபாய்க்கும், சம்பங்கி 300 ரூபாய்க்கும், செவ்வந்திப் பூ 130 ரூபாய்க்கும், ரோஸ் 130 ரூபாய்க்கும், வாடாமல்லி 50 ரூபாய்க்கும், செண்டு மல்லிப்பூ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்பொழுது பூக்களின் விலை அதிகரித்த போதிலும், விளைச்சல் இல்லாததால் பூக்கள் சாகுபடி ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Views: - 446

0

0