வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்ய முயன்ற இளைஞர்.. திடீரென கேட்ட சப்தம் ; எகிறி குதித்த போது மாட்டிய நபருக்கு தர்மஅடி!!

Author: Babu Lakshmanan
30 December 2022, 4:30 pm
Quick Share

திண்டுக்கல் ; பழனியருகே பெண்ணை கொலை செய்ய முயன்றபோது உறவினர்கள் வந்ததால் தப்பியோட முயன்ற குற்றவாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ளது மானூர். இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மணிமேகலை(52). கணவரை இழந்து வாழ்ந்து வரும் மணிமேகலைக்கு நான்கு பெண் ‌குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த மணிமேகலை, தற்போது தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது வீட்டருகே மணிமேகலையின் உறவினரான தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு நவீன் (21) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் மணிமேகலை வீட்டினுள் சமையல் செய்து கொண்டிருந்த போது, அவரது உறவினரான நவீன்(21) என்ற இளைஞர் வீட்டிற்குள் புகுந்து கதவோரம் மறைந்து நின்றுள்ளார்.

அப்போது, வெளியே வந்த மணிமேகலை நவீனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட முயன்ற போது மணிமேகலையை கீழே தள்ளிய நவீன், மறைத்து வைத்திருந்த அம்மிக்கல்லை எடுத்து மணிமேகலையை தாக்க முயன்றுள்ளார். இதனை சுதாரித்துக்கொண்ட, நவீனை தள்ளிவிட்டு, வெளியே வந்து கூச்சலிட்டார்.

மணிமேகலையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், வீட்டிற்குள் இருந்த நவீன் பின்புறமுள்ள சுவற்றில் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது, அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாகவும், அதில் இருந்த கம்பிகள் குத்தியதில் நவீன் கழுத்து, கைகளில் பலத்த காயமேற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கீரனூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த நவீனை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நவீன் எதற்காக மணிமேகலையை தாக்கினார் என்பது குறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 345

0

0