பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு: நண்பனை திட்டமிட்டு கொலை செய்த 9 பேர் கைது…புதுச்சேரியில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
12 May 2022, 9:34 am
Quick Share

புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கலில் வாலிபரை கொலை செய்த அவரது நண்பர்கள் ஒன்பது பேரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைகூடம் பின்புறத்தில் வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக இருப்பதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டிருந்தது தமிழக பகுதியான கூனிமேட்டை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஷேக் திப்பு சுல்தான் என்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் யார் யார் உடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து அவரது செல்போஃன் பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் கடைசியாக சாரம் பகுதியை சேர்ந்த சிவா @ சிவசங்கரன் உடன் பேசி இருப்பது தெரியவந்ததை அடுத்து போலிசார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

இதனையடுத்து, சுல்தான தனக்கும் தனது நண்பர்களுக்கும் உடற் பயிற்சி கூடத்தில் பழக்கம் ஏற்ப்பட்டதாகவும், சுல்தான் ஆன்லைனில் வர்த்தகம் செய்வதாகவும் அதற்கு வட்டிக்கு பணம் வேண்டும் என்று கடந்த 1 வருடத்திற்கு முன்னர் கேட்டதை அடுத்து சிவா அவரது நண்பர்களான பிரபாகரன், சந்திரமோகன், ராஜேஷ், ஜாஹிர் ஹுசேன், கெஸ்தான் @ குட்டி கெஸ்தான், சரத்ராஜ், சகாயராஜ், சுரேஷ் ஆகியோர் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்தாகவும் இதற்கு அவர் மாதமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், கடந்த 2 மாத காலமாக சரிவர வட்டியும் தராமல் வாங்கிய பணத்தை திரும்ப தருவதாக கூறி அலைகழித்து வந்ததால் நேற்று இரவு சுல்தானை தனது நண்பர்களுடன் 45 அடி சாலை க்கு வரவழைத்து அங்கிருந்து நெல்லிதோப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு மது அருந்தி கொண்டிருக்கும் போது சுல்தானை மறைத்து வைத்திருந்த இரும்பு ராட் மற்றும் பீர் பாட்டிலால் தலையில் தாக்கி அவரை ஆட்டோவில் ஏற்றி கொண்டு தட்டாஞ்சாவடியில் உள்ள மார்கெட் கமிட்டி கிடங்கின் பின்புறத்தில் வீசி விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வேல்ராம்பட்டு ஏரிகரையில் தலைமறைவாக இருந்த சிவாவின் நண்பர்கள் 8 பேரையும் வடக்கு குற்ற பிரிவு போலிசார் கைது செய்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு ராட், பீர் பாட்டில், மூன்று இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 9 பேரையும் போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் கைதானவர்களில் ராஜேஷ், சரத் ராஜ், கெஸ்தான் @ குட்டி கெஸ்தான் ஆகியோர் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 825

0

0