கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து தே.மு.தி.க அறிக்கை வெளியீடு
24 September 2020, 10:52 amசென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து அக்கட்சியின் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் சில மாவட்டங்களில் மட்டும் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து தே.மு.தி.க. தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கழக தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.