ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக – பாஜகவினரிடையே மோதல் : இருதரப்பினரிம் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
12 March 2022, 8:55 am
Quick Share

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக மற்றும் பாஜகவினரிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்து நெடுவயல் ஊராட்சி தலைவராகவும், பாஜக ஒன்றிய பொருளாளராகவும் முப்புடாதி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 25ம் தேதி இந்த ஊராட்சியில் எழுத்தராக பணிபுரியும் மாரிமுத்து என்பவருக்கும், முப்புடாதிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், மாரிமுத்துவை முப்புடாதியின் மகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், அச்சன்புதூர் காவல்துறையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஊராட்சி எழுத்தர் மீது புகார் அளிப்பதற்காக முப்புடாதி மற்றும் அவரின் மகன் மற்றும் பாஜக பிரமுகர்கள் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில், அங்கு இருந்த திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக மற்றும் பாஜக இடையே கைகலப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 775

0

0