திமுக வேட்பாளர் மீது திமுக நிர்வாகி மோசடி புகார்… தாயுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Author: kavin kumar
16 February 2022, 2:01 pm
Quick Share

திருச்சி : திருச்சி மாநகராட்சியில் 36 வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பண மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி திமுக பொறுப்பாளர் தாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தீக்குளிக்க முயற்சி செய்த குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவரும், திருச்சி மாநகர மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளராகவும் இருப்பவர் ஜெயமோகன். திருச்சி மாநகராட்சி 36வது வார்டில் திமுக சார்பில் தற்போது போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனுடன் இணைந்து கடந்த 2012ம் ஆண்டு முதல் மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்த பணிகளை கூட்டாக மேற்கொண்டு வந்தனர். இதில் தொழில் தொடங்க ஜெயமோகன் முதலீடாக சுமார் ரூபாய் 12லட்சம் பணத்தை கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார். பின்னர் ஜெயமோகன் கார்த்திகேயனுடன் ஒப்பந்த பணியிலிருந்து விலகினார்.

ஆனால் தான் கொடுத்த பணம் 12 லட்சத்தை திருப்பி கேட்டார். ஆனால் கடந்த பத்து வருடங்களாக பணத்தை தராமல் அலைக்கழித்தார். இதுகுறித்து திமுக தலைமைக்கும், மாவட்ட அமைச்சர் கே.என்.நேருவிடமும் பலமுறை புகார் கொடுத்தார். புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது திருச்சி மாநகராட்சி 36-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் கார்த்திகேயன். தற்போதும் பணம் தராமல் ஏமாற்றி வரும் திமுக மாநகராட்சி 36-வது வார்டு வேட்பாளர் கார்த்திகேயனை கண்டித்தும், திமுகவைச் சேர்ந்த தன்னையே ஏமாற்றி வரும் இவர் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார் என கூறியும்,

அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியும் திமுக மாநகர் மாவட்ட பொறியாளர் அணி துணைத் தலைவர் ஜெயமோகன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது தாயுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது காவல்துறையினர் தடுத்து ஜெயமோகனையும் அவரது தாயாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 581

0

0