வேலூரில் முதல் வெற்றியை பதிவு செய்த திமுக வேட்பாளர்…!

Author: kavin kumar
6 February 2022, 1:50 pm
Quick Share

வேலூர் : வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 8வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சி பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம், ஒடுக்கத்தூர் ஆகிய 4 பேரூராட்சிகளில் 180 வார்டுகளில் அதிமுக, திமுக, பாமக கம்யூனிஸ்ட் , மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நேற்று முன்தினம் 1,147 தங்களின் வேட்பு தாக்கல் செய்தனர். அதனையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.

இதில் வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 8-வது வார்டில் சுவாரஸ்யம் ஒன்று அரங்கேறியது. அது என்னவென்றால் 8-வது வாரடில் திமுக சார்பில் சுனில் குமார், அதிமுக சார்பில் சுரேஷ்குமார், பா.ம.க சார்பில் நாயுடு பாபு (எ) ராமச்சந்திரன், பா.ஜ.க சார்பில் ராஜா தியாகராஜன், உட்பட்ட 6 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 5 பேரின் மனுக்களும் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டு சுனில் குமாரின் மனு மட்டும் ஏற்கப்பட்டது. இதனையடுத்து 8வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். வேலூர் மாநகராட்சி தேர்தலில் முதல்முறையாக ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதையடுத்து திமுக வேட்பாளர் சுனில் குமார் வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி நந்தகுமார் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பா.கார்த்திகேயன், திமுக அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Views: - 1175

0

0